சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதைபொருள் கடத்தல் மன்னனான முன்னாள் திமுக நிர்வாக ஜாபர் சாதீக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீடு மற்றும், அவரது நண்பரான இயக்குனர் அமீர் அலுவலகம், வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை செய்து வருகிறார்கள். இயக்குனர் அமீரிடம் ஏற்கனவே போதைபொருள் தடுப்பு த்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் திமுக நிர்வாகியான, ஜாபர் சாதிக்டகின் போதைபொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீரின் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதேபோல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள். மேலும் சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலர் சிற்றரசு வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. இவர் இயக்குநர் அமீருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், கொடுங்கையூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் திரைப்பட அக்கவுண்ட்ஸ் மேனேஜர் ரகு வீடு உள்பட சென்னையில் 25 இடங்களில் வருமான அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே அமீர், விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பட்டது. இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் மேலாக விசாரணை செய்யப்பட்டது.
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை, உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த மாதம் 15 ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் டெல்லி காவல் துறையினரும் சோதனை செய்தார்கள். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 50 கிலோ மதிப்பிலான வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு பதுங்கி இருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக், திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்தார். அந்த தொடர்பு மூலம் அவர் பல நாடுகளுக்கு போதை பொருளை கடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. ஜாபர் சாதிக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதற்கிடையில், தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9 ஆம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சாதிக், தனது கடத்தல் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தில் யாருக்கு தொடர்பு என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனபே போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில், அரசியல் கட்சிகளுக்கு நிதியாக கொடுத்துள்ளது உள்பட, வணிக தொடர்புகள், திரைப்படம் தயாரிப்பு என பல துறைகளில் முதலீடு செய்துள்ளார். அவர் தயாரித்த, இன்னும் வெளியாகாத ‘இறைவன் மிகப்பெரியவன்’ திரைப்படத்தை அமீர் இயக்கி உள்ளார். இதனால் அமீருக்கு போதை பொருள் வழக்கில் சமந்தம் இருப்பதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் எழுந்தது. அதன்பேரிலே அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.