தீஸ்பூர்

சாம் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் அசிரியைகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் இன்று விதிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் பள்ளிக்கு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகளைப் பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பில், ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெகிங்ஸ் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இந்த உடைகளைப் பொதுமக்கள் அதிகளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என அதற்கு விளக்கமும் அளித்து உள்ளது.

அந்த அறிக்கையில்,

“அசாம் மாநிலத்தில் கல்வி நிலையங்களில் பணிபுரியும் சில ஆசிரியர், ஆசிரியைகள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிகின்றனர் என எங்களின் கவனத்திற்கு வந்தது.   இவை பெருமளவிலான மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை.  எனவே ஆசிரியர்கள் பணியின்போது, அனைத்து வகையிலும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே அவர்களது ஆடை கட்டுப்பாடானது, நல்லொழுக்கம், நாகரீகம், தொழில் சார்ந்த விதம் மற்றும் பணியிடத்திற்கு ஏற்ற தீவிர நோக்கங்களைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.  , மேற்கூறிய விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, அனைத்து கல்வி நிலையங்களைச் சார்ந்த ஆசிரியர், ஆசிரியைகளும் பின்வரும் ஆடை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்”

எனப் பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டு உள்ளது.

மேலும், ஆசிரியர், ஆசிரியைகள் என்ன வகையான ஆடைகளை அணியலாம். எவற்றை அணியக் கூடாது என அறிவித்து உள்ளது.  அதன்படி ஆசிரியர்கள் பேண்ட், சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். (டி-சர்ட், ஜீன்ஸ் உள்ளிட்டவை கூடாது). ஆசிரியைகள் சல்வார், சேலை ஆகியவற்றை அணிந்து பணிக்கு வரவேண்டும். (டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் லெகிங்ஸ் உள்ளிட்டவை அணிந்து வரக் கூடாது.