புதுடெல்லி: பொது இடங்களில் ‘அல்ட்ரா வைலட்’ எனப்படும் புற ஊதா கதிர்கள் மூலமாக கிருமி நீக்கம் செய்யக்கூடிய கோபுரத்தை உருவாக்கியுள்ளது டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்.
விமான நிலையம், வணிக வளாகம், மெட்ரோ ரயில் நிலையம், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்டவை இந்த இடங்களில் அடக்கம்.
அதிக மக்கள் கூட்டம் வந்து செல்லும் பொது இடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மின் சாதனங்களைக் கொண்ட சோதனைக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில், கிருமி நாசினிகள் மூலம் கிருமி நீக்கம் செய்வது சவாலான காரியமாக இருக்கிறது.
இதுபோன்ற இடங்களில், ‘அல்ட்ரா வைலட்’ எனப்படும் புறா ஊதா கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்யும் கோபுரத்தை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.
‘யு.வி. பிளாஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரமானது, 12க்கு 12 அடி அளவுள்ள இடத்தை 10 நிமிடங்களில் கிருமி நீக்கம் செய்யும். 400 சதுர அடி இடத்தை 30 நிமிடங்களில் சுத்தமாக்கும் திறன் கொண்டது.
இந்த இயந்திரத்தை வைஃபை தொழில்நுட்ப உதவியுடன், லேப்டாப் அல்லது மொபைல் மூலமாக தொடாமலேயே இயக்கவும் முடியும் என்று தெரிவித்தனர் டிஆர்டிஓ அதிகாரிகள்.