சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி.  நீக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக கருத வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு இபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். அதிமுகவில் எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே நடைபெற்ற  அதிகார மோதல் காரணமாக, கடந்த 11ந்தேதி (ஜூலை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ்-ன் பொருளாளர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்பட அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது. மேலும், அவரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய மகனும் அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத் உள்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஒபிஎஸ்-ன் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது தொடர்பாக சட்டமன்ற சபாநாயகருக்கும் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  பாராளுமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ரவீந்திரநாத் குமாரின் அந்தஸ்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ரவிந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும், ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக கருத கூடாது என எழுதி உள்ளார்.