டாக்டர் பி. குகானந்தம், விருது பெற்ற அரசு மருத்துவர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தமிழக அரசு பணியில் சேவை செய்த அவர், இப்போது கோவிட் -19 குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ளார். தனது வாழ்நாளில் தமிழ்நாட்டில் குறைந்தது ஏழு வெவ்வேறு தொற்றுநோய்களைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்தியுள்ளார். 1992-93ல் ‘மெட்ராஸ் ஸ்ட்ரெய்ன்’ என அழைக்கப்படும் விப்ரியோ காலரா பரவிய போது, காலரா பாக்டீரியாவின் புதிய வகையை கண்டுபிடித்த குழுவை  வழிநடத்திய இவரே. அவர் அரசு சேவையில் இருந்தபோது பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய், சிக்குன்குனியா, டெங்கு மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ் தொற்றுநோய்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன.

தி லீட் உடனான ஒரு பிரத்யேக நேர்காணலில், டாக்டர் குகானந்தம், மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பற்றி நாம் ஏன் பயப்படத் தேவையில்லை, தொற்று பரவலின் தொடர்பை உடைக்க என்ன செய்ய வேண்டும் என்று பேசுகிறார். “பயப்பட வேண்டாம், ஆனால், எச்சரிக்கையாக இருங்கள். அதிகரித்து வரும் எண்ணிக்கை நமது (அரசாங்கத்தின்) நல்ல செயல்திறனையே  காட்டுகின்றன. நாம் மரணங்களை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கை குறைவதே நமது இப்போதைய தேவை,” என்று அவர் கூறினார்

கோவிட் -19 இன் முதல் தொற்று இந்தியாவில் பதிவான காலத்திலிருந்து தொற்று மற்றும் அதை கையாளும் கொள்கைகள் எவ்வாறு இருந்தன என்பதை டாக்டர் குகானந்தம் விளக்கினார். இதைப்பற்றி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கூறும்போது, “நம் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறோம், இங்கு பெரும்பாலான COVID-19 தொடர்பான மரணங்கள் சில செயல்திறன்மிக்க சிகிச்சை நெறிமுறையுடன் தவிர்க்கப்படலாம்”. மேலும், “மேற்கத்திய உலகத்தால் கூட முடியாத போது, வைரஸை எவ்வாறு சமாளிப்போம் என்று இந்தியாவில் மக்கள் கவலைப்பட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாம் ஒரு (நாடு தழுவிய) ஊரடங்கில் ஈடுபட்டோம். அது சமூகத்தில் தொற்று பரவுவதை தாமதப்படுத்தியது. அக்காலகட்டத்தில், இந்தியாவில், சீனா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.”

தனிமைப்படுத்தல் ஆரம்பத்தில் மிகவும் கண்டிப்பாக இல்லை, எனவே தொற்று அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரவியது. மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் தான் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், அதற்குள்ளாக, நோய் வெளிநாட்டிலிருந்து பயணம் செய்தவர்களிடமிருந்து பரவத் தொடங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து பெரும் கூட்டமாக பாதிக்கப்பட்ட மூன்று நிகழ்வுகள் நாமுடன் தொடர்பில் இருந்தன.

முதலாவது டெல்லி தப்லிகி கிளஸ்டர் – நிச்சயமாக நாம் யாரையும் குறை சொல்ல முடியாது, இது ஒரு திட்டமிடப்படாத அத்தியாயம். அடுத்ததாக, சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு இந்த நோயை எடுத்துச் சென்ற நிகழ்வு ஆகும். மூன்றாவது மும்பை, குஜராத் மற்றும் டெல்லியில் இருந்து வீடு திரும்பிய மக்கள். ஆனால் அவர்களை ஓரளவு திறம்பட கையாண்டு கட்டுப்படுத்த முடிந்தது, ”என்றார்.

நோயாளிகளின் எண்ணிக்கை சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?

“துரதிர்ஷ்டவசமாக சென்னை ஒரு சிக்கலான காஸ்மோபாலிட்டன் நகரமாகும், இதில் 75 லட்சம் பேர் உள்ளனர், மேலும் 35 லட்சம் புலம்பெயர்ந்தோர், வெளியூர்களில் இருந்து வேலைக்கு வந்து செல்வோர் என இங்கே ஓரிடத்தில், ஒன்றாக வசிக்கின்றனர்,” என்று டாக்டர் குகானந்தம் விளக்கினார். “நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு சேரி மக்கள் ஆவர். ஊரடங்கின் போது கூட, மக்கள் நீண்ட நேரம் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை, ஏனெனில், சேரிகளில் உள்ள வீடுகளின் பரப்பளவு மிகக் குறைவு. எனவே எங்களால் இங்கு ஊரடங்கை சரியாக அமல்படுத்த முடியவில்லை, அது அவர்களின் தவறு அல்லது எங்கள் தவறு அல்ல, ஏனெனில் அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் அத்தகையவை,” என்றார்.

தண்டையார்பேட்டை மண்டலம் அல்லது பேசின் பிரிட்ஜ் மண்டலம் அல்லது புபுளியந்தோப்பு மண்டலம் போன்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டமும் கட்டுப்படுத்தப்பட்டபோது, சென்னையில் அது அதிகரித்துக்கொண்டே இருந்தது. மேலும் சோதிக்க ஐ.சி.எம்.ஆரிடமிருந்து அறிவுறுத்தல்கள் வந்துக் கொண்டிருந்தன. ஒரு மையக் குழு உறுப்பினராக, சோதனைகள் மிகவும் கவனத்துடன் செய்யப்படவேண்டும் என்று கூறினேன்,” என்றார்.

கொரோனா உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்க வேண்டும் – ஏனென்றால் இதன் பொருள் நாம் அதிகமான நோயாளிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு சிகிச்சையளித்து நோய் பரவுவதை நிறுத்துகிறோம் என்பதாகும். எனவே எண்ணிக்கை அதிகரிப்பு என்பது இந்த தொற்றுநோயை அகற்றுவதை நோக்கி செல்கிறது, ”என்று அவர் கூறினார்.

கவனம் செலுத்தப்பட்ட சிகிச்சை வழிமுறைகள்

சோதனை மற்றும் சிகிச்சைக்கான முன்னுரிமை பட்டியலில் அதிக ஆபத்துள்ள நோயாளிகள் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையை அரசு உருவாக்கியுள்ளது என்று டாக்டர் குகானந்தம் கூறுகிறார். COVID-19 காரணமாக ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, “கொமொர்பிடிடிஸ் நோயாளிகளை மிகுந்த கவனத்துடன் முன்னுரிமை அளித்து கவனித்துக் கொண்டோம். இதன்படி, ஏற்கனவே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், டயாலிசிஸ் போன்றவை கொண்ட கொரோனா நோயாளிகளை அதிக கவனத்துடன் பார்த்துக் கொண்டோம். மேலும், சென்னை கார்ப்பரேஷன் இவர்களின் வீடுகளுக்கே சென்று அழைத்து வந்தது,” என்றார்.

ஒவ்வொரு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா?

அனைவருக்கும் மருத்துவமனையில் அனுமதி தேவையில்லை என்று நிபுணர் கூறுகிறார். உண்மையில் வைரஸ் தொற்று உறுதியானவர்களில் சிறிய அளவிலான நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். “மற்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் குறித்த செய்தி ஊடகங்களில் வந்தபோது, மக்கள் தங்களை பரிசோதிக்க மருத்துவமனைகளுக்கு விரைந்து வந்தனர். ஆனால் அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. பலர் வைரஸ் தொற்று ஏற்படும் சாதகமான நிலையில் உள்ளவர்கள். ஆனால் அவர்கள் நோயாளிகள் அல்ல. 100 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களில் ஐந்து பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருப்பவர்கள். அதே சமயம் மீதி 95% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களே. இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூரில் இருந்து வந்து செல்பவர்கள்.

பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வயது மற்றும் இளையவர்கள். இந்த மக்களிடையே ஏற்படக்கூடிய ஆபத்து என்னவென்றால், அவர்கள் தங்கள் குடும்பத்திலோ அல்லது சமூகத்திலோ உள்ள பெரியவர்களை பாதிக்கக்கூடும். நடுத்தர வயது அல்லது இளைய வயதினரின் அனைத்து உறுதியான நோயாளிகளும் உரிய வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும், ஆனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நிலையில் உள்ளவர்கள் நோயைக் பெரும் அபாயத்தில் உள்ளவர்கள் ஆவர். ஆனால் உலகளாவிய பதிவு செய்யப்பட தகவல்களின் படி, இறந்துபோன பெரும்பாலானவர்கள், 65-70% வயதானவர்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவிலும் இதே நிலைதான்.

ஏற்கனவே நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கும் வைரஸ் தொற்றுக்கு நேர்படலாம். உதாரணமாக, ஒரு 30 வயது இளைஞர் காசநோய் அல்லது ஆஸ்துமா இருந்தால் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வைரஸ் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள, ஏற்கனவே வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக பாதிக்கும். மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை கவனித்துக்கொள்வது இப்போது நமக்கு உள்ள சவாலாக உள்ளது, அங்கு மோசமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள்.  லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்கள் இரண்டாம் நிலை பராமரிப்பு மையங்களில் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும்.

லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கண்காணிக்க டாக்டர்களிடம் கூறப்பட்டுள்ளது. அவர்களின் நிலை மோசமடைந்துவிட்டால், அவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்ற முடியும். மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது  மரணத்தைத் தவிர்ப்பதை உறுதி செய்கிறது. தனிப்பட்ட சுகாதாரம், முகக்கவசம் அணிவது, சமூக விலகல், இந்த விஷயங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை போன்ற அனைத்து மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களிலும் ஆக்சிஜன்  வார்டுகளை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளோம். ஹைஃபாக்ஸியாவுடன்  (இரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் செறிவு) வரும் நோயாளிகளுக்கு பிரத்யேகமாக 100 படுக்கைகளை அமைக்க விரும்புகிறோம்.

இந்த நோய் நுரையீரலின் அல்வியோலியை (நுரையீரலில் உள்ள காற்று குழாய்களின் கிளைகள்) பாதிக்கிறது, மேலும் இரத்தத்தில் உறைதல் ஏற்படுகிறது. இந்த இரண்டு சிக்கல்களும் கையாளப்பட உள்ளன. மூச்சுத் திணறலை கொண்டிருக்கும் நோயாளியை பரிசோதித்த பிறகு, நோயாளிக்கு எக்ஸ்ரே செய்வதன் மூலம் நுரையீரல் புண்கள் அல்லது ஒளிபுகாநிலையை சரிபார்க்க முடியும். இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டால், குணமடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் ”என்று டாக்டர் குகானந்தம் கூறினார்.

4 மாவட்டங்களில் இந்த 12 நாள் ஊரடங்கு ஏன்?

“நிபுணர் குழுவில் இருப்பதால் இதை முதலமைச்சருக்கு பரிந்துரைக்கிறேன், ஏனென்றால் பொருளாதாரம், குறிப்பாக ஏராளமான தினசரி வருமானத்தை நம்பியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவதால், ஊரடங்கை அமல்படுத்த செல்ல அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை” என்று டாக்டர் குகானந்தம் கூறினார். “இந்த ஊரடன்கிற்கு முன்பு சென்னையில் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனவே இந்த மரணங்களை நிறுத்த வேண்டும் என்று நினைத்தோம். இது  ஒரு ஊரடங்கு உத்தரவு மட்டுமல்ல, இது மருத்துவமனை நிர்வாக மட்டத்திலும், எங்கள் கள நடவடிக்கைகளிலும் எங்கள் பணிகளை திட்டமிடுவது, பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண்பது, இதனால் சமூகத்தில் பரவும் சங்கிலியை உடைக்க முடியும் என்பதற்காகவும்,”  என்றார்.

உண்மையில், நாம் 14 நாட்கள் கேட்டோம், நமக்கு 12 நாட்கள் கிடைத்தன – அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் பராமரிப்பை சீராக்க இந்த 12 நாட்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். நாம் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம். அத்துடன்  கொமர்பிட் நோயாளிகளுக்கு கவனம் செலுத்தும் பரிசோதனையை அதிகரிப்போம். இதனால், சமூகத்தில் பரவலாக பரவாமல் தொற்றுநோய்களின் சங்கிலியை உடைப்போம். இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக நான் கூறி வருகிறேன். நான் 7-8 தொற்றுநோய்களைப் பார்த்திருக்கிறேன், எந்தவொரு தொற்றுநோய் அல்லது தொற்றுநோய்க்கும் ஐந்தாவது மாதத்திற்குப் பிறகு இருந்தது இல்லை,” என்றார்.

மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது மாதங்களில் அதிக தொற்றுநோய்கள் காணப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டில் கூட, பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய் பரவி வந்தது. நாம் அதை மூன்று மாதங்களில் கட்டுப்படுத்தினோம்.  பின்னர் அது பரவலாக இருந்தது. இப்போது கூட இதனால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் நடக்கும். பின்னர் தொற்று எப்போதும் போல குறையும். பின்னர், நோய் சமூகத்தில் இங்கேயும் அங்கேயும் காணப்படும். அது உள்ளூர் நிலைமை என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்த்தொற்றும் அடுத்த மாத இறுதி வரை நீடிக்கலாம்.  தொற்று கணிப்புகள் நம் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை,” என்றார்.

பரவல் சங்கிலியை உடைப்பதில் சமூகம் தீவிரமாக ஒத்துழைத்தால், இன்னும் ஒரு மாதம் அல்லது 45 நாட்களுக்குள் முற்றிலுமாகக் குறைய வேண்டும்.

விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டால் – சீனாவிலோ அல்லது மேற்கு நாடுகளிலோ, மக்கள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். இங்கே, நாம் மக்களைக் குறைகூற முடியாது, ஏனென்றால் மக்களுக்கு பரிதாபகரமான வாழ்க்கை நிலைமைகளுக்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளோம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் சேரிகள் இன்னும் உள்ளன. சேரி மக்கள் மோசமாக பாதிக்கப்படவில்லை என்றாலும், வைரஸ் உறுதியான நோயாளிகள் உள்ளனர். எந்தவொரு பெருநகரத்திலும் உழைக்கும் சமூகம் வெளியில் வர வேண்டிய நிலையில் இருப்பதால், மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எண்ணிக்கை குறைந்து வரும் போக்கை நாம் நிச்சயமாகக் காண்போம்.

உச்ச காலம் ஏற்கனவே தொடங்கிவிட்டது, மேலும் 3-4 வாரங்களுக்கு இது செல்லும் என்பது எனது மதிப்பீடு. இது அதிகமாக இருந்தால், அது இன்னும் ஒரு மாதத்திற்கு செல்லும். அவ்வளவுதான். இது டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு வரை இருக்க முடியாது. ஏனென்றால் இதற்கான சான்றுகள் சீனாவும் பிற நாடுகளும் தான், ”என்றார்.

வைரஸ் தொற்றைக் குணப்படுத்துவது பற்றி?

குணப்படுத்த அல்லது தடுப்பு மருந்திற்காக காத்திருப்பதற்குப் பதிலாக, நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று டாக்டர் குகானந்தம் கூறுகிறார். அதுவே, உயிரைக் காப்பாற்றும் மற்றும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று அவர் உணர்வதாகக் கூறுகிறார். “ஒரு பொது சுகாதார நபர், ஒரு தொற்றுநோயியல் நிபுணர் என்ற முறையில், வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவான சிகிச்சையை நான் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த வைரஸ் மனித உடலினுள் எந்த விளைவையும் ஏற்படுத்தாவிட்டால் மனித உடலில் இறக்க வேண்டும். எனவே, உடலில் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாத வைரஸானது 28-30 நாட்களுக்குள் இறந்துவிடும்.

ஆர்டி-பி.சி.ஆரில் இறந்த வைரஸையும் காண முடிகிறது. முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் கோமர்பிட் நிலைமைகளுக்கும், WHO போன்ற சர்வதேச நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்துகளும் கொண்டு முறையாக சிகிச்சையளிக்கப் போகிறீர்கள் என்றால், நோயாளிகள் குணமடைவார்கள். நோயாளிகள் ஹைபோக்சியாவால் அவதிப்படுவதால் அவர்களுக்கு அதிக ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டியுள்ளது. நிமோனியா, நிமோனிக் ஒருங்கிணைப்பு மூச்சுக்குழாய் டைலேட்டர்கள் வைத்துக் கவனித்துக்கொள்ள வேண்டும். பின்னர் நோயாளிகள் வேகமாக குணமடைவார்கள், ”என்றார்.

இந்த தொற்றுநோயிலிருந்து தமிழகம் மிக விரைவில் வெளிவரும் என்று டாக்டர் குகானந்தம் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் தனது நம்பிக்கையை பல்வேறு காரணிகளில் அடிப்படையில் விளக்குகிறார்.

“தமிழகத்தில் மிகவும் வலுவான பொது சுகாதார அமைப்பு உள்ளது, அதனால்தான் நாம் ஏராளமான நோயாளிகளை கண்டறிய முடிகிறது. பிற மாநிலங்கள் நோயாளிகளை கண்டறிய திணறும்போது, நம்மிடம் மிகச் சிறந்த தணிக்கை மற்றும் கண்காணிப்பு அமைப்பு உள்ளது. அதிகமானவர்களை அடையாளம் கண்டு, ஒப்புக் கொண்ட முதல் மாநிலம் தமிழகம். மீட்பு வீதமும் மிகவும் அதிகமாக உள்ளது. நமக்கு அரசியல் ஆதரவு, மருத்துவர்களின் ஆதரவு மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் ஆதரவும் இருப்பதால் நாம் நாட்டில் மிகச் சிறந்தவர்கள் என்று நினைக்கிறேன்.

2000 ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கொண்ட எந்த மாநிலமும் நாட்டில் இல்லை. நம்மிடம் 17,000 துணை மையங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரு நாளில் கட்டப்படவில்லை, இது முப்பது – நாற்பது வருடங்களுக்கும் மேலாக கட்டப்பட்டது. நாம் நாட்டின் மிக அதிகமான  சோதனைகளை மேற்கொள்ளும்  மாநிலமாக உள்ளோம், நாம் சவால்களை அடையாளம் கண்டு, அதை எதிர்கொள்கிறோம். எனவே, அரசாங்கத்தின் செயல்திறன், மருத்துவர்களின் செயல்திறன், கன்சர்வேன்சி மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள், காவல்துறை, மற்ற அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடமாக மதிப்பிட வேண்டும்,” என்றார்.

சமூக பங்களிப்பு தேவை

கொரோனா பரவலின் தொடர்புகளை உடைக்க சமூக பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும். இதன் மூலமே கொரோனா வைரஸின் முடிவை தீர்மானிக்க முடியும் என்று டாக்டர் குகானந்தம் மீண்டும் வலியுறுத்துகிறார். இதற்காக, தொற்று பரவல் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை சில எளிய விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். “கை கழுவுதல் இருக்க வேண்டும். முகக்கவசம்  அணிய வேண்டும். மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.

இந்த வைரஸுடன் வாழ்ந்து, இதை ஒரு உள்ளூர் நோயாக்க நாம் திட்டமிடப் போகிறோம் என்றால், நாமும் வாழும் முறையை மாற்ற வேண்டும். இந்த தொற்றுநோய் மருத்துவ முறையிலும் தரத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. மக்கள் வாழும் முறையிலும் மாற்றம் இருக்க வேண்டும். உங்கள் கைகளைக் கழுவுங்கள், உங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுங்கள். உங்கள் சூழலை சுத்தமாக வைத்திருங்கள், முகமூடி அணியுங்கள், மற்றவர்களிடமிருந்து விலகி இருங்கள். மக்கள் பயப்படக்கூடாது, ஆனால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிப்படை விஷயங்கள் – கை கழுவுதல் மிகவும் முக்கியம்.

உதாரணமாக, நைஜீரியாவில் எபோலா வைரஸ் மக்களைக் கொன்றபோது, உலக சுகாதார அமைப்பும் நைஜீரிய அரசாங்கமும் அதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது உங்கள் கைகளை கழுவ வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். இது நோயைக் குறைத்துள்ளது, ” என்றார்.

நன்றி: www.thelede.in

English: Sandhya Ravishankar

தமிழில்: லயா