சென்னை

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் தமிழகம் மிகவும் துயருற்று வருகிறது.  இன்று தமிழகத்தில் 76 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 1596 ஆகி உள்ளது.  மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும் பாதிப்பு குறையாத நிலையில் உள்ளது.  ஊரடங்கை முன்னிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கி வருகிறது.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர் பலருக்கு கொரோனா வந்திருப்பது மன வேதனை அளிக்கிறது

அரசு உள்ளிட்ட அனைவருமே ஊரடங்கு முடியும் வரை பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும்.   பத்திரிகையாளர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் கொரோனா சோதனை செய்யவேண்டும். செய்திகளை ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புவது மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனே நிறுத்திவைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளைத் திறந்து சுங்க கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மனிதநேயமற்ற செயல். ரேஷனில் அரிசி கார்டு வைத்துள்ளவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.