சென்னை: பேருந்து பயணிகளிடம் ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்க  அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாளை முதல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ரூ.2000 நோட்டு வாங்கப்படாது.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு, புதிய ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. அதைத்தொடர்ந்து 2016 – 2017ம் நிதியாண்டில் 354 கோடியே 29 லட்சம் அளவிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. கடந்த 2017-18 நிதியாண்டில் வெறும் 11.15 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டது. 2018-19 நிதியாண்டில் அதுவும் குறைந்து வெறும் 4.65 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டன. அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவதை ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்திவிட்டது.

அதைத்தொடர்ந்து, 2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது.  அதன்படி,  2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 3.62 லட்சம் கோடியாக குறைந்தது.

இந்த நிலையில், பேருந்து பயணிகளிடம் இருந்து ரூ.2,000 நோட்டுக்களை  நாளை முதல் (28-ஆம் தேதி) முதல் வாங்கக்கூடாது என்று கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். அதன்படி, 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.