சென்னை:

சென்னை மண்ணடியில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.

சிஏஏவுக்கு எதிராக சென்னை மண்ணடியில் 27- வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “திமுக தூண்டிவிட்டு தான் போராட்டம் நடைபெறுவதாக கூறுவார்கள் என்பதால் முதலில் வரவில்லை. சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பாதிப்புதான்; தொடர்ந்து நடத்தும் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரும் அதற்க்கு துணை நிற்க கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு துணை நிற்காமல் இருந்தால் திமுக இஸ்லாமியர்களுக்கு துணை நிற்கும்” என்றார்.

போராட்டத்தின் தொடக்கத்திலேயே உங்களை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும் நினைத்ததாகவும், அப்படி சந்தித்திருந்தால் திமுக தூண்டிவிட்டு தான் இந்த போராட்டம் நடப்பதாக கூறுவார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னரே திமுக குரல் கொடுத்ததாகக் கூறிய மு.க.ஸ்டாலின், நாடு முழுவதும் இதற்கு எதிராக போராட்டம் நடந்து வருவதாக குறிப்பிட்டார்.