டில்லி

நாடாளுமன்றத்தில் எம்பிக்களை இடைநீக்கம் செய்ததற்கு திமுக எம் பி திருச்சி சிவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கியதால் 19 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி என்.ஆர்.இளங்கோ, சண்முகம், கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி, சோமு, சுஷ்மிதா தேவ், டோலாசென், உள்ளிட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து திமுக எம்.பி.க்கள் உட்பட 19 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது திமுக எம்.பி. திருச்சி சிவா, ”நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு எம்பிக்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல் ஆகும்.  எதிர்க்கட்சிகள் பிரச்சனைகள் குறித்துப் பேச விரும்பினால் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

நாளை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் இடைநீக்கம் குறித்து கேள்வி எழுப்புவோம்.  தற்போது திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினருடன் கலந்து பேசுவதே இல்லை. இடைநீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற நாளை அவை தொடங்கும் போது வலியுறுத்துவோம்” எனக் கூறி உள்ளார்.