டில்லி

ந்தியாவுக்கு  பாரதம் என்னும் பெயர் சூட்டுவதை எதிர்க்க முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.  மேலும் குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் என இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மாநிலங்களில் ஒன்றியம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

நமது நாட்டின் பெயர் இந்தியா என்பதற்குப் பதில் ‘பாரத்’ என மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரத் அழைப்பிதழ் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம்,

“அரசியல் சாசனத்திலேயே பாரதம் என்ற பெயர் உள்ளது; அதனால் பாரத் என்ற பெயரை எதிர்க்க முடியாது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி ‘இந்தியா’ என பெயர் வைத்துள்ளதால் இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது. பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதையும் செய்ய நினைக்கிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை.”

என்று தெரிவித்துள்ளார்.