சென்னை:
ருமான வரிச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் நண்பர்களிடமிருந்து மாதத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை அவரது குடும்ப செலவுகள், வீட்டு வாடகை மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு சம்பளம் தருவதற்காக பெற்றுக் கொள்வதாக 14.04.2023 அன்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து இவ்வாறு பணம் பெற்று வருவதாக கூறியுள்ளார். ஏறத்தாழ ரூபாய் 1.76 கோடி இவ்வாறு வாங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் தன் கையில் அணிந்திருக்கும் ரபேல் கடிகாரத்தை ரூபாய் 3 லட்சம் பணமாக கொடுத்து சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.