சென்னை: தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 1,250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக கணக்கு காட்டப்பட்டு, வரி ஏய்ப்பு நடந்துள்ள விபரத்தை, வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதாக, போலி கணக்கு காட்டப்பட்ட இருப்பதாகவும் ரூ.28 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் குவித்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

அரக்கோணம் தொகுதி தி.மு.க., -எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பாரத், பாலாஜி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஈரோடைச் சேர்ந்த டாக்டர் வீரையனுக்கு சொந்தமான சவீதா கல்வி நிறுவனங்கள், வீடுகள், விடுதிகள், தொழிற்சாலைகள் என ஏராளமான சொத்துக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் இலங்கை உள்பட வெளிநாடுகளிலும் உள்ளது.

 ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  அக்டோபர்  05ந்தி  காலை முதல் சோதனை மேற்கொண்டனர். அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்றது. ஆதசூழுழலு,   பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல். மேலும், ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை 5 நாட்கள் வரை நீட்டித்தது.

இந்த சோதனைகளின்போது மலைக்க வைக்கும் வகையில், கணக்கில் வராத ஆவணங்களும், கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் சவீதா மருத்துவ கல்லூரியின் பிணவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டு மூட்டைகளும் கைப்பற்றப்பட்டன,.  இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைக்கப்பெற்றது என்ன என்பத குறித்து,  மத்திய நிதி அமைச்சகம் சார்பில், வருமான வரித்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் இரண்டு குழுமங்களில், கடந்த 5ம் தேதி சோதனை நடத்தினர்.

இந்தக் குழுமங்களுக்கு சொந்தமான மருத்துவ கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம், 100 இடங்களில் சோதனை நடந்தது.

போலி ‘ஸ்காலர்ஷிப்’ இதில், வருமான வரி ஏய்ப்புக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. உதிரியான கணக்கு தாள்கள், டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த சோதனையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தி, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கல்வி கட்டணத்தை கணக்கில் காட்டாமலும், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது போன்றும், போலியாக கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது.

மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தில் ஒரு பகுதியை கணக்கில் காட்டவில்லை; மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது போன்று போலியாக தயாரிக்கப்பட்ட ரசீதுகளும் ஆதாரங்களாக கிடைத்துள்ளன.

இந்த வகையில், 400 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

கல்வி உதவி தொகை பெயரில், 25 கோடி ரூபாய்க்கு போலி கணக்கு காட்டப்பட்டுஉள்ளது.

ஒரு நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், இடைத்தரகர்கள் வாயிலாக மாணவர் சேர்க்கை நடந்ததும், அதற்காக இடைத்தரகர்களுக்கு, 25 கோடி ரூபாய் கமிஷன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

மது ஆலையிலும் மதுபான ஆலையில், 500 கோடி ரூபாய் அளவுக்கு போலியாக செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது, மதுபாட்டில்கள், அதற்கான சேர்ப்பு பொருள், கூடுதலாக ஆல்கஹால் போன்றவற்றை வாங்கியதாகவும், போக்குவரத்துக்கு கூடுதல் செலவு செய்ததாகவும், பொய் கணக்கு காட்டப்பட்டு உள்ளது.

இந்த கொள்முதல் மற்றும் செலவுக்கான ‘இன்வாய்ஸ்’ ஆவணமோ, இருப்பு பதிவேடோ இல்லை. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக, கணக்கில் வராத பணத்தை, வேறு வழிகளில் வரவு வைத்து பணமாக்கியிருப்பது தெரிகிறது.

அதாவது, செயல்படாத அல்லது இல்லாத நிறுவனங்கள் பெயரில் காசோலை வழங்கப்பட்டு, அதை முதலீடு என்ற வகையில், வேறு வழியில் மீண்டும் திரும்ப பெற்றதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதேபோல், வியாபார ரீதியாக அனுமதிக்கப்படாத செலவுகளும், வரிக்கணக்கில் காட்டப்பட்டுஉள்ளன

அறக்கட்டளைகளில் இருந்து, அறங்காவலர்களுக்கான தனிப்பட்ட செலவாகவும், வணிக முதலீடாக வழங்கப்பட்டதாகவும், 300 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில், ஒரு நிறுவனம், ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்றை வாங்க, அறக்கட்டளை வழியே நிதி பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், 32 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத ரொக்கப்பணமும், 28 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக  திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளில் சிக்கி, கைதாகி சிறையில் உள்ளார். இந்நிலையில், தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியிருப்பதால், தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.