சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து சரிதான் என உயர்நீதி மன்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து  திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பில், “1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை மீறும் வகையில், உள் இடஒதுக்கீடு கொடுக்கும் போது விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை ரீதியிலான சாதிய உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கு சரியான, நியாயமான காரணங்களை மாநில அரசுகள் கூற வேண்டும்.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் அதற்கான சரியான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. எனவே இதன் காரணமாக உள் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறோம். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம்” எனத் தீர்ப்பளித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில் அவசர கோலத்தில் சட்டம் இயற்றப்பட்டதே, உள்ஒதுக்கீடு ரத்துக்கு காரணம் என்று விமர்சித்திருக்கிறார்.

தீர்ப்பு குறித்து தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறுகையில்,  “உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அந்த தீர்ப்பின் அத்தனை விஷயங்களையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவில்லை. மாநில அரசுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை. மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் உள்ளது. அதுபோல,  குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது.

உள் இட ஒதுக்கீடு, ஏற்கெனவே எம்பிசிக்கு 20 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம், மாநில அரசுக்கு அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.

நீதிபதி தணிகாசலம் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கொடுக்க பரிந்துரைத்திருந்தார். இந்த அறிக்கை ஜனார்த்தனம் கமிசன் அறிக்கையை பார்க்காமல், நீதிபதி தணிகாசலம் அறிக்கை தந்துள்ளார். எனவே இதுபோன்ற உள் இட ஒதுக்கீடு நிலைக்கத்தக்கதல்ல. இது அரசியல் சட்டப்பிரிவு 14-க்கு விரோதமானது எனக்கூறி ரத்து செய்துள்ளனர்” என்று கூறினார்.