சென்னை:

திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை 6மணிக்கு  அறிவிக்கப்படும்  என்றும், அதில், காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  திமுக எம்பி. கனிமொழி நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து இறுதி பேச்சு வார்த்தை நடத்தினார். சில மணி நேரங்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூட்டணி  மற்றும் தொகுதி பங்கீடு முடிவு  செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி மற்றும், காங்கிரசுக்கு திமுக எத்தனை தொகுதிகள் ஒதுக்கியுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்று மாலை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வருகிறார்.

அதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் நடைபெறும் என்றும், அதன்பிறகு கூட்டணி குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இன்று மாலை 6 மணிக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  தொகுதிகள்  குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.