சென்னை:
திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு,  காலம் தான் பதில் சொல்லும் என்று பதில் தெரிவித்தார். இது கூட்டணிக்குள் இன்னும் சமாதானம் அடையாததை உறுதிப்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை என்று குற்றம்சாட்டி, இதுதான் திமுகவின் கூட்டணி தர்மமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விடுத்திருந்தார். இது திமுக தலைமைக்கு அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், கூட்டணிக்குள்ற  புகைச்சல் ஆரம்பமானது.

இதையடுத்து, டெல்லி நேற்று சோனியா காந்தி தலைமையில்   நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. இது தொடர்பாக கருத்துதெரிவித்த டி.ஆர்.பாலு, இதுகுறித்து வருத்தம் தெரிவித்தாமல் மட்டும் போதுமா? இதனால் கட்சித் தலைமைக்கு உண்டான அவப்பெயர் நீங்கிவிடுமா? என பொடிவைத்து பேசினார்.

இந்த பரபரப்பான சூழலில், இன்று காலை சோனியாவை கே.எஸ்.அழகிரி சந்தித்து விளக்கம் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்த கைகள், எங்களுக்குள் பிரச்சினை இல்லை என்று மீண்டும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, “தமிழக காங்கிரஸ தலைவர் கே.எஸ்.அழகிரி  திமுக குறித்த அறிக்கையை கேஎஸ் அழகிரி தவிர்த்திருக்கலாம். அறிக்கையால், கட்சி தொண்டர்கள் கவலையில் உள்ளார்கள், குற்றச்சாட்டை தலைவர் மீது வைத்த குற்றச்சாட்டாகவே கட்சியினர் பார்க்கிறோம் என்றார்.

அப்போது செய்தியாளர்கள்,  இன்று கே.எஸ்.அழகிரி சோனியாவை சந்தித்து பேசியதையும், அவர் கூறியுள்ள கருத்துக்களை தெரிவித்து கேள்வி எழுப்பினர். அதை கண்டுகொள்ளாத டி.ஆர்.பாலு, ‘ திமுக – காங்கிரஸ் கூட்டணி பழையபடியே தொடருமா என்பதற்கு காலம்தான்  பதில் சொல்லும்” என்று டிவிஸ்ட்  கொடுத்துள்ளார்…

திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.