சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், விஜயகாந்தின் தேமுதிக கட்சியை கூட்டணியில் இணைக்க அதிமுக மற்றும் திமுக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி ஏற்படுத்துவோம் என்று தமிழக பாஜக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துள்ளது. அதைத்தொடர்ந்து தேமுதிகவை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன.

பாஜக சார்பாக தேமுதிகவிடம் பேச மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வந்து தேமுதிக அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து அதிமுக தரப்பில் இருந்தும் தேமுதிகவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

தேமுதிக, பாமகவை போல அதிக தொகுதிகள் கேட்பதால், அதிமுககூட்டணியில் சேருவது இழுபறியாகி வருகிறது.

இந்த நிலையில் தேமுதிக, திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக திரைமறைவு பேச்சு வார்த்தைகள் நடை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென விஜயகாந்தை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேமுதிக திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

விஜயகாந்தை சந்தித்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,  தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென்ற எனது அபிப்ராயத்தை அவரிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.