சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி  இதுவரை 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருப்பதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக தமிழகஅரசு  அக்.21 (இன்று), 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து 4,218 சிறப்புப் பேருந்துகள், பிற இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 6,370 பேருந்துகள் என மொத்தம் 10,588 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து பயணிக்க சுமார் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பல்வேறு ஊர்களில் இருந்து பிற ஊர்களுக்கு பயணிக்க 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முன்பதிவு செய்திருந்தனர். அரசுப் பேருந்துகளில் செல்ல 1,66,659 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இரவு (21ந்தேதி) வரை  3,300 அரசுப்பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்கு வரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் 6 இடங்களில் இருந்து நாளைவரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.