தீபாவளி பண்டிகையை ஒட்டி 5ஜி சேவையை அறிமுகப்படுத்த இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது அடுத்த நடவடிக்கையாக கேம்ப கோலா குளிர்பானத்தை மீண்டும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

கோகோ கோலா நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வந்த கேம்ப கோலா நிறுவனம், இந்தியாவில் இருந்து கோகோ கோலா வெளியேறிய பின் 1977 ம் ஆண்டு இந்திய குளிர்பான சந்தையில் காலூன்றியது.

கோல்ட் ஸ்பாட், தம்ஸ்-அப் உள்ளிட்ட குளிர்பானங்கள் வரும் வரை இந்திய சந்தையில் கோலோச்சி இருந்த கேம்ப கோலா, மீண்டும் கோகோ கோலா வந்ததை அடுத்து சுணங்கிப் போனது மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளும் கோடௌன்களும் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்-களாக மாறின.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த ப்யூர் டிரிங்க்ஸ் குழுமத்திடம் இருந்த கேம்ப கோலா உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் 22 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்கள் மூலம் கேம்ப கோலா குளிர்பானத்தை சந்தைக்கு மீண்டும் கொண்டு வர இருக்கிறது, கோலா, ஆரஞ்சு மற்றும் லைம் ஆகிய மூன்று சுவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய குளிர்பான சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைந்திருப்பது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களுக்கு புளியை கரைத்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.