கொழும்பு: யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை திருச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூலை 1ந்தேதி முதல் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டில்  சென்னை திருச்சிராப்பள்ளிக்கு விமானங்கள், மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து புதுச்சேரியில் காரைக்காலுக்கு ஒரு படகு சேவை ஆகியவற்றுக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, கடல்போக்குவரத்து விரைவில் தொடங்கும் என அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த நிலையில்,  ஜுலை 1 ஆம் தேதி முதல் சென்னை, திருச்சிக்கு விமான சேவை ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையை சேர்ந்த ஏர்காம் நிறுவனம், இந்த நேரடி விமான சேவையை தொடங்குகிறது.  அதன்படி  யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு வழி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும் , திருச்சிக்கு ஒருவழி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.