சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் குறித்து தினமலர் கடுமையாக விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் ஆகஸ்டு  25ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால், 17 லட்சம் மாணவ – மாணவியர் பயன் பெறுவர். ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு, 50 கிராம் அளவில் ரவை, கோதுமை, அரிசி, சிறுதானியங்கள் போன்றவை, 15 கிராம் பருப்பு, உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் வழங்கப்படுகின்றன.

சமைத்த உணவு, 100 முதல் 200 கிராம் வரையிலும், 60 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பாரும் வழங்கப்படும். சமைத்த உணவை, பள்ளி மேலாண்மை குழு ருசி பார்த்த பிறகே, மாணவருக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், காலை உணவு திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் கடுமையாக விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் செய்தி பிரசுரம் செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், 

உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!

#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!

என குறிப்பிட்டுள்ளார்.