புதுடெல்லி: 

சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் போராட்டம் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி பாராளுமன்றத்தில் பேசிய சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்ததாவது:
தாராவி போன்ற குடிசை பகுதிகளில் நோய் தொற்று பரவுவதை மாநில அரசு கட்டுப்படுத்தியுள்ளது, இது உலக சுகாதார அமைப்பின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தியது “பாபி ஜி பப்பட்” (அண்ணி அப்பளம்) சாப்பிடுவதன் மூலம் நடக்கவில்லை என்று சிவசேனா தலைவர் கிண்டலாக தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான அர்ஜுன் ராம் மேக்வாலின் கூற்றை குறிப்பிடுகையில் அப்பளம் சாப்பிடுவதன் மூலம் கரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம் என்று தெரிவித்திருந்தார், இதனை தற்போது சிவசேனா தலைவர் கிண்டலடித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இதிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது, அது எங்களுக்கு வெற்றியே.

எனது தாயும் எனது சகோதரரும் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.மகாராஷ்டிராவில் 30,000க்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இன்று இங்கு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. பிஎம்சியின் இந்த முயற்சிகளை உலக சுகாதார மையமும் பாராட்டியுள்ளது.

இவ்வளவு முயற்சி செய்தும் எதிர்க்கட்சியினர் எங்களை விமர்சிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் குணமடைந்த 30,000 பேரும் அண்ணி அப்பளம் சாப்பிட்டு குணமடையவில்லை என்று சஞ்சய் ரவாத் பாராளுமன்றத்தில் பாஜகவின் தலைவரான அர்ஜுன் ராம் மேக்வாலை கேலிசெய்துள்ளார்.