அயோத்தி

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து 23 ஆம்தேதி முதல் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்தனர்.

அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  எனவே பக்தர்களின் வசதிக்காக, தரிசன நேரத்தை நீட்டித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.  நேற்று முதல் காலை 6 மணி முதல், ராமரை தரிசனம் செய்யலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசனம் செய்யலாம். மதியம் 12 மணி முதல் சிறப்புப் பூஜைகள் மற்றும் ஆரத்தில நடைபெறும். நேற்று பவுணர்மி என்பதால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஏராளமானோர் அங்குள்ள சரயு நதியில் புனித நீராடினர். .

அயோத்தியில் பாதுகாப்புக்காக விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்துறை படை வீரர்கள் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்

அயோத்தி காவல்துறை ஆணையர் கவுரவ் தயாள்,

”நாங்கள் நிலைமையை எளிதாக்க முயல்கிறோம். அவசரக்கால வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் பைசாபாத் நகருக்குள் செல்ல அனுமதிக்கிறோம். அதே நேரம் நெரிசலை தவிர்க்க அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைவது இன்னும் தடை உள்ளது” 

என்று கூறினார்.

பிரதமர் மோடி, மார்ச் மாதம் வரை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்வதை மத்திய அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.