விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி,  சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சதுரகிரி மலையில் அமைந்துள்ள சிவன்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகமும், வனத்துறையில், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அனமதி வழங்கி வருகிறது. பொதுவாக,மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய  சூழலுக்கு ஏற்ப அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசையையொட்டி,  6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆடி அமாவாசை அன்று சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் திருவிழா நடைபெறும்.  இந்த திருவிழா 16ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.  இந்த விழாவின்போது, மலையில் அமர்ந்துள்ள சிவபெருமானை தரிசிக்க  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.   அதனால்,  ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சாமி தரிசனம் செய்தவுடன் மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்கி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.