டில்லி

நேற்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி 13 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.

நேற்று காலை வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று அதிகாலை மாறியது. அது புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.  காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 13 கி.மீ. வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவில் இருந்து 620 கி.மீ தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ள இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.