சென்னை

மே 8 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவர் பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர்,

”தற்போது தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.  தவிர, காற்றின் ஈரப்பத அளவு கூடியிருப்பதால், நிலப்பகுதியில் ஈரப்பத குவியல் அதிகரித்துள்ளது.  இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 60 இடங்களில் கனமழையும்,13 இடங்களில் மிகக் கனமழையும் பெய்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 19 செ.மீ., சேலம் மாவட்டம் சங்கரி துர்க்கத்தில் 17 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 15 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 14 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி முதல் தேனி வரையிலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

தவிர சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 3-ம் தேதி (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 6ஆம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இதைத் தொடர்ந்து, 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.  இது வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். ”

எனத் தெரிவித்துள்ளார்.