சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கி உள்ள நிலையில்,  சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை தடுக்கும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலையொட்டி, அதை கட்டுப்படுத்த சென்னை  மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பல்வேறு பகுதிகளிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து,  டெங்கு காய்ச்சல் பரவல் நடவடிக்கையாக, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், கால்வாய்கள்,  பயன்பாடற்ற நீர் நிலைகளில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குடியிருப்புகள், பள்ளி கல்லூரி வளாகங்கள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், வீடுகள், குடியிருப்புகள், தொழிற்நிறுவனங்களில் தேவையற்ற இடங்கள்  மற்றும் பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள மாநகராட்சி,  சுகாதாரமற்ற குடியிருப்பு மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு 100 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்  என எச்சரிக்கை விடுத்துள்ளது.