டெல்லி: ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல, இதற்கு மக்கள் தேர்தலில் பதில் தருவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

நாட்டின் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் வேலை என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கை முடக்கியுள்ள வருமான வரித்துறையினரின் நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏறப்டுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி, கடந்த 5நிதியாண்டுகளில் முறையான வரி செலுத்தவில்லை என்று கோரி அபராதத்துடன் பணத்தை செலுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்படி,  கடந்த 1993-94-ஆம் நிதியாண்டுக்கான காங்கிரஸின் வருமான வரிக் கணக்கில் கண்டறியப்பட்ட தவறுக்காக ரூ.54 கோடி அபராதம் , 2016-17-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.182 கோடி, 2017-18-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.179 கோடி, 2018-19-ஆம் ஆண்டுக்கான அபராதம் ரூ.918 கோடி, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.490 கோடி என மொத்தம் ரூ.1,823 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

இந்த நிலையில்,  இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், தனது சமுகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,, ஒரு கட்சி பல ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொரு கட்சி கடுமையான வரிக் கோரிக்கைகளை எதிர்கொள்ளும் போது, தோ்தல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமாகவும் நடத்தப்படும் என்று நாம் எவ்வாறு கூற முடியும்?

ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல.

நமது ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் போலி முயற்சிகளே அன்றி வேறில்லை,

ஆனால் இந்த வித்தையால் பாஜகவுக்கு எதிராக நாங்கள் பயப்பட மாட்டோம், வரும் தேர்தலில் இந்த நாட்டு மக்கள் பாஜகவுக்கு அனைத்து பதில்களையும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

பாஜகவின் 8,250 கோடி தோ்தல் நன்கொடை பத்திரங்கள் ஊழல் நாட்டையே உலுக்கியது.

ஆளும் கட்சி தங்கள் நண்பர்களின் நிதியை ஆதரிக்கும் போது, வருமான வரித்துறை வசதியாக காங்கிரஸை குறிவைத்து மற்றொரு ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சில வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. குறிப்பாக, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞா் காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது.  அத்துடன் அக்கட்சி ரூ.210 கோடி அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துள்ளதாகவும், அந்த நிதி போக கட்சிக்குச் சொந்தமான எஞ்சிய தொகையைப் பயன்படுத்த வருமான வரித் துறை அனுமதிக்கவில்லை என்றும் அக்கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

முன்னதாக, மத்திய பாஜக அரசு மற்றும் வருமான  வரிதுறையின் நடவடிக்கைகை கண்டித்து,  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் மாநில கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,   வரி பயங்கரவாதத்துக்கு எதிராக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாநில மற்றும் மாவட்ட தலைமையகங் களில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளார்.

சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி வசூலிக்க அடிப்படை ஆதாரமின்றி, போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்கி 8 ஆண்டுகள் காங்கிரஸ் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகள் மீண்டும் மதிப்பிடப்படுகின்றன. ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக் கோரி, காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8,200 கோடியை திரட்டியுள்ளது. இதற்கு புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்குப் பிந்தைய கையூட்டுகள், போலி நிறுவனங்கள் உள்ளிட்ட வழிமுறைகளை அக்கட்சி பின்பற்றியுள்ளது.  அதேவேளையில், வரி பயங்கரவாதத்திலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

பிற கட்சிகளைப் போல வரிவிலக்கு பெற்றுள்ள கட்சியாக விளங்கும் காங்கிரஸை மக்களவைத் தோ்தலின்போது வருமான வரி செலுத்த கட்டாயப்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், வருமான வரித் துறையின் நோட்டீஸை தொடா்ந்து, பாஜகவின் வரி பயங்கரவாதத்துக்கு எதிராக ச போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளது.