டெல்லி:

சி.பி.ஐ. புதிய இயக்குனராக அலோக் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி மாநகர போலீஸ் கமிஷனராக இருப்பவர் அலோக் வர்மா. இவரை சி.பி.ஐ இயக்குனராக நியமித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முன்னதாக இவரது பெயரை பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், லோக்சபாவில் 2வது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஆலோசித்து முடிவு செய்தனர். இவர் 2 ஆண்டு காலம் இந்த பதவியில் இருப்பார்.
1979ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர் கடந்த 11 மாதங்களாக டெல்லி மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார். மேலும், இவர் திகார் சிறைச் சாலை தலைவராகவும், மிசோராம் காவல் துறை தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி.ஐ இயக்குனராக இருந்த அனில் சின்கா பதவி காலம் கடந்த டிசம்பர் 2ம் தேதியுடன் முடிந்தது. இடைக்கால இயக்குனராக ராகேஷ் அஸ்தனா அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.