டில்லி :

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கட்சிகளின் பெயர்கள்  தங்களது சாதி மற்றும் மதத்தை முன்னிலை படுத்தியே வைக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பெரும்பாலான அரசியல் கட்சிகள், தங்களது கட்சிகளின் பெயருடன் அவர்கள் சார்ந்த சாதி மதம் போன்றவற்றை இணைந்துள்ளன. இதன் காரணமாக அந்த கட்சி ஒருசாராரின் கட்சியாக பாவிக்கப்படுகிறது.

சாதி மதம் பெயரில் அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள சாதி, மதத்தை நீக்க வேண்டும், இல்லையேல், அந்த அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்  என உத்தரவிடக்கோரி டில்லி  உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக மத்திய அரசும் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.