டெல்லி: விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதை டெல்லி உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது.

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

அதை தொடர்ந்து, இலங்கையில் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றது. அதில் விடுதலைப்புலிகள் வீழ்ந்ததாகவும், அந்த இயக்கத்தை முற்றாக அழித்துவிட்டதாகவும் இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இருப்பினும், தமிழகத்தில் அந்த இயக்கத்துக்கான ஆதரவு இருப்பதாக கருதப்பட்டது. அதன் காரணமாக, 2019ம் ஆண்டு, புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டது.

அதன்படி, புலிகள் மீதான தடை வரும் 2024ம் ஆண்டு வரை அமலில் இருக்கும். இதற்கிடையே, தடை குறித்து அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில், மதுரையில் மதுரையில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடுவர் மன்ற தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி திங்கரா சிங்கால் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி, புலிகளுக்கு ஆதரவாக வாதாடினார்.

இந் நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையடுத்து, 2024ம் ஆண்டு வரை இந்தியாவில் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.