டில்லி

டில்லியில் யமுனை ஆற்று வெள்ளம் திட்டமிட்ட சதி என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக டில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையை அடுத்து, யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நீர்மட்டம் கடந்த சில நாட்களாக அபாய அளவை கடந்து உயர்ந்து காணப்படுகிறது. நொய்டா பகுதிகளில் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 550 ஹெக்டேர் வரையிலான நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.

இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர். மொத்தம் 8 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. டில்லியில் கால்நடைகள், நாய்கள், முயல்கள், வாத்துகள், சேவல்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மீட்கப்பட்டு உள்ளன.

யமுனை ஆற்றில் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், அபாய அளவை விட 2 மீட்டர் உயரம் என்ற அளவில் 207.68 மீட்டாராக உயர்ந்து உள்ளது ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டில்லி பொதுப் பணித் துறை அமைச்சர் அதிஷி,

“யமுனை ஆற்றில் நீர் வடிந்து கொண்டிருக்கிறது. டில்லி  மக்கள் அடுத்து 12 மணிநேரத்தில் நிவாரணம் பெறுவார்கள். டில்லிக்கு மட்டுமே அனைத்து நீரும் ஏன் திருப்பி விடப்படுகிறது? என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.  உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானாவுக்குச் செல்ல கூடிய கால்வாய்களுக்கு ஒரு துளி கூட ஏன் நீர் திறந்து விடப்படவில்லை?’

என்று கேள்வி எழுப்பி உள்ளார்.