ராமேஸ்வரம்: இலங்கை அரசு கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுதலைசெய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று 4வது நாளாக போராடி வருகின்றனர். இன்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்கும் போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகச் சொல்லி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகவே இருக்கிறது.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறில் தொடர்கைது, படகு பறிப்பை கண்டித்து, இந்த பிரச்சினையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மீனவர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி போரட்டத்தில், அந்த பகுதி மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் இன்று நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு சார்பில் யாரும் மீனவர்களைச் சந்தித்து உறுதியளிக்காததால் நாளையும் போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
4வது நாளான இன்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.