டெல்லி:

நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஸ்மிரிதி இரானி சிலிண்டருடன் நடத்திய போராட்டம் தொடர்பான படத்தை டிவிட்டரில் பகிர்ந்து, ராகுல்காந்தி கலாய்த்துள்ளார்….

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலை உயர்த்தி உள்ளது. அதன்படி,  மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.147 உயர்த்தியுள்ளன.  டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.5 உயர்த்தப்பட்டு ரூ.858.5 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும் உள்ளது.

இந்த  விலை உயர்வை கண்டித்து  டெல்லியில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தொண்டர்கள் பெட்ரோலியம் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தற்போதைய வயநாடு எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்பிஜி விலை உயர்வு குறித்து டிவிட்டரில் விமர்சித்து உள்ளார்.

அதில்,  மத்தியில் யுபிஏ கூட்டணி ஆட்சி காலத்தின்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டபோது,  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போதைய மத்திய அமைச்சர்  ஸ்மிரிதி இரானி சிலிண்டருடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய படத்தை பகிர்ந்துள்ளார்.

அத்துடன், , “எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ .150 ஆக உயர்த்தியை எதிர்க்கும் இந்த பாஜக உறுப்பினர்களுடன் நான் உடன்படுகிறேன். உயர்த்தப்பட விலையை திரும்பப் பெறுமாறு ராகுல் கோரிக்கையும் வைத்துள்ளார். அத்துடன்  #RollBackHike என்ற ஹெஷ்டேக்கும் போட்டுள்ளார்.

ஸ்மிருதி இரானியின் இந்த புகைப்படம் அவர் பாஜகவின் மஹிலா மோர்ச்சா தலைவராக இருந்தபோது,  2010ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி அன்று,  அப்போதைய மேற்கு வங்க பாஜக தலைவர் ராகுல் சின்ஹாவுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.