டெல்லி: வங்கக்கடலில் உருவாய யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இது நாளை  ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் வாயப்பு உள்ளதால்,  மேற்குவங்காளம், ஒடிசா கடற்கரைப் பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. யாஸ் புயல் நாளை ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக மாறியது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று காலை தீவிர புயலானது.  இது  மெல்ல மெல்ல  வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய சாகர் தீவுகள் இடையே அதி தீவிர புயலாக நாளை நண்பகல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையடுத்து அந்த பகுதிகளில் கடுமையான காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மாநிலங்கள் பாதுகாப்பு பணிகளை விரைந்துமேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி,   மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விமானவழிகளால் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் தேசிய பாதுகாப்பு படையினரும் தயார் நிலையில் இருப்பதுன்,  பாதுகாப்பு விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

‘யாஸ்’ புதன்கிழமை ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளைத் தாக்கக்கூடும் என்றும்  அப்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பு

யாஸ் புயல் நெருங்கி வருவதால் ஒடிசா மாநிலம் கேந்திராபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.   இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு அனுப்பட்டுள்ளனர். 16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. கிழக்குக்கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.