அமெரிக்க மருத்துவமனைகளில் சைபர் தாக்குதலை அடுத்து பல மாநிலங்களில் மருத்துவமனை கணினிகள் சீர்குலைத்துள்ளது. இதனால் அவசர சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ப்ராஸ்பெக்ட் மெடிக்கல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா, தவிர, டெக்சாஸ், கனெக்டிகட், ரோட் தீவு மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனைகளின் கணினிகள் செயலிழந்தது.

பென்சில்வேனியாவில், அப்லாண்டில் உள்ள க்ரோசர்-செஸ்டர் மருத்துவ மையம், ரிட்லி பூங்காவில் உள்ள டெய்லர் மருத்துவமனை, ட்ரெக்சல் ஹில்லில் உள்ள டெலாவேர் கவுண்டி மெமோரியல் மருத்துவமனை மற்றும் ஸ்பிரிங்ஃபீல்டில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மருத்துவமனை உள்ளிட்ட வசதிகளில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள், வெளிநோயாளர் சந்திப்புகள், இரத்த வங்கி சேவைகள் மற்றும் பிற சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிகட்டில் உள்ள மான்செஸ்டர் மெமோரியல் மற்றும் ராக்வில்லி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் வியாழன் முழுவதும் மூடப்பட்டு நோயாளிகள் அருகிலுள்ள மற்ற மருத்துவ மையங்களுக்குத் திருப்பி விடப்பட்டனர்.

மருத்துவமனைகள் மீதான இந்த சைபர் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்புகள், ஐ.டி. பாதுகாப்பு மற்றும் சைபர் பிரிவினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நிலைமை சீராகும் வரை காகித பதிவுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளை மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ளது.