டெல்லி:

மிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து  நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை 24,942 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  5,210 பேர் குணமாகி உள்ளனர். அதே வேளையில் பலி எண்ணிக்கையும் 779 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் 21 நாட்கள் முதல் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் தொடர்ந்த நிலையில், ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் மட்டும் ஏப்ரல் 20ந்தேதி முதல் சில தொழில்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக டெல்லி, மகாராஷ்டிராவில் பல பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கலமா அல்லது முடிவுக்கு கொண்டு வரலாமா என்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இரண்டாவது ஊரடங்கு காலம் நிறைவடைய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் நாளை நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி ஊரடங்கை தளர்த்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த ஏப்ரல் 2ந்தேதி  மற்றும் 11-ம் தேதி என இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.