சென்னை:  கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடியாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. 7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு செய்யப்பட்டு உள்ளதாக கடந்த அதிமுக அரசுமீது குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய எடப்பாடி தலைமையிலான அதிமுக, ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு, அதன்மூலம் கோடிக்கணக்கான ஊழல் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளைக்கும் எடப்பாடிக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சாட்டப்ட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போதைய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே உள்கட்சி குழப்பம் மற்றும் கொட நாடு விவகாரத்தில்  சிக்கித் தவிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிஏஜி அறிக்கை, புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சிஏஜி அறிக்கை காரணமாக, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள் என பல முன்னாள்கள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை குழு கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட இழப்பு, மோசமான நிதி மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  உயர்கல்வி, ஊரக உள்ளாட்சி உள்ளிட்ட 7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையினால் கோடிக்கணக்கில் வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 – 20ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான தணிக்கை அறிக்கை நேற்று (செப். 13) சட்டப்பேரவையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

உயர் கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட 7 துறைகளின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதன்மை கணக்காய்வு தலைவர் அம்பலவாணன்,   “மாநிலம் முழுவதும் அரசு கல்லூரிகளில் 5 ஆயிரத்து 590 ஆசிரியர் பணியிடங்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 51 விழுக்காடு காலியாக உள்ளது. இதை நிரப்ப எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் கல்லூரிகளின் அடர்வு உயர்கல்விக்கு உரிய வயது கொண்ட ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்திய அளவில் சராசரி 28 கல்லூரிகள் என்பதை விட 35 கல்லூரிகளாக உள்ளது. எனினும், தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கல்லூரி அடர்த்தி அனைத்திந்திய சராசரியை விட குறைவாக இருந்தது. நீலகிரி, திருப்பூர், திருவாரூர் மாவட்டங்களில் முறையே கல்லூரி அடர்த்தி ஒரு லட்சம் மாணவர்களுக்கு 13, 15 மற்றும் 16 என மிகக் குறைந்த அளவில் காணப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை.

சென்னை கிண்டியிலுள்ள கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பாம்பு கடி மருந்து உற்பத்தியை மீண்டும் தொடங்க முழுமையான தொழில்நுட்ப மற்றும் நிதி வகையில் சாத்தியக்கூறு ஆய்வை நடத்தாமல் நிதி பெறும் வழியை உறுதி செய்யாமாலும் தொடங்கியதால் ரூ. 16.77 கோடி பயனற்ற செலவு ஏற்பட்டுள்ளது.

வழிகாட்டுநெறிமுறைகளை விவசாயத்துறை சரியாக அமல்படுத்த தவறியதில் மானிய வகையில் செய்யப்பட்ட ரூபாய் 3.01 கோடி செலவு பயனற்றதாகியுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உயிரி தொட்டி அமைப்பதில் மோசமான திட்டமிடல் மூலம் 4.44 கோடி ரூபாய் பயனற்ற செலவாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சீர் கெட்டிருந்தை, சிஏஜி அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதிமுக ஆட்சியின்போது சில ஆண்டுகளாக  தணிக்கையாளர் குழு அறிக்கை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போதைய திமுக அரசு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, உடனடியாக சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.. இதனால், எடப்பாடிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.