டில்லி

ரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் தேதி அன்று இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வருடத்துக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது. இதன்படி மார்ச் 23 முதல் ஏப்ரல் 5 வரை நடக்க உள்ள இருவாரங்களுக்கான போட்டி விவரங்கள் அறிவிக்கப்பட்டு தொடக்க நாளன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன.

 

நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நேரடியாக மூன்று உறுப்பினர்களும் மற்றவர்கள் தொலைபேசி மூலமும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்தும் அதனால் நாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்ட முடிவில் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் நாள் போட்டியின் போது நடைபெற உள்ள தொடக்க விழா ரத்து செய்யப்படுகிறது. அந்த விழாவுக்கு செலவழிக்க உள்ள பணத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் குடும்ப நிதிக்கு வழங்கப்படும்” என தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டி தொடக்க விழா என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றதாகும். இந்த தொடக்க விழா ரத்து செய்யப்பட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.