டெல்லி: அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர்  மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சி வெற்றி அடையும் என நமது  விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். பாதுகாப்பான, விலை குறைவான தடுப்பூசி மருந்தை பெறுவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

ஆகவே தான் இந்தியாவை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. சில வாரங்களில் கொரோனா மருந்து தயாராகும் என்று  வல்லுநர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் கூறியதும் தடுப்பூசி வழங்கும் பணி இந்தியாவில் தொடங்கும்.

தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா தடுப்பூசி விலை தொடர்பாக மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம்.  இந்த விவகாரத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கப்படும்.

தடுப்பூசியை வழங்குவதில் மத்திய, மாநில அரசுக்கள் இணைந்து செயல்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தடுப்பூசி வழங்குவதில் இந்தியா சிறப்பான அனுபவத்தையும், திறனையும் கொண்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை அரசியல் கட்சி தலைவர்கள் தனக்கு அனுப்பலாம், அனைவர் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறினார்.