புதுடெல்லி:
டுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மே இறுதியில், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா கூறியதாவது:
கொரோனா இரண்டாவது அலை காரணமாக, சில ராஜ்யசபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

அதனால், 2022ல் கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும். சட்டசபையின் ஆயுட் காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
ஏற்கனவே கொரோனா பரவலுக்கு மத்தியில், பீஹார் மாநில தேர்தலை நடத்திய அனுபவமும் உள்ளது. அதே வழிமுறைகளை பின்பற்றி, சமீபத்தில் தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை நடத்திக் காட்டினோம். அதனால், அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.