பனாஜி: கோவா மாநில பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் அடனாசியோ மான்சராட்டே, மைனர் பெண் ஒருவரை கற்பழித்தார் என்ற புகாரின் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவுசெய்துள்ளது கோவா நீதிமன்றம்.

16 வயது பெண் ஒருவரை வன்புணர்வு செய்தார் அடனாசியோ என்று அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடந்தாண்டு அவர்மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை வடக்கு கோவா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை.

இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 17ம் தேதி துவங்குகிறது. அடனாசியோ பனாஜி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு வயது 55. வன்புணர்வு சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஆண்டு 2016. அப்போது அந்தப் பெண்ணுக்கு வயது 16.

போதை மருந்து கொடுத்து தன்னைக் கற்பழித்தார் எனவும், தனது தாய் அடனாசியோவிடம் ரூ.50 லட்சத்திற்கு தன்னை விற்றுவிட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார் அந்தப் பெண். கடந்த 2016ம் ஆண்டே கைது செய்யப்பட்ட அடனாசியோ, தற்போது பெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.