ராய்ப்பூர்

பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெயப்ரதாவை நீதிமன்றம் தேடப்படும் நபராக அறிவித்துள்ளது.

நடிகை ஜெயப்ரதா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். ஜெயப்ரதா 1994 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய ஜெயப்ரதா 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயப்ரதா பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். அப்போது ஜெயப்ரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு ராய்ப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  ஜெயப்ரதா நேரில் ஆஜராக நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஜெயப்பிரதா விசாரணைக்கு ஆஜராகாமல் தாமதித்து வந்தார்.

முன்னாள் எம்.பி. ஜெயப்ரதாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு விசாரணை ராய்ப்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போதும், விசாரணைக்கு ஜெயப்ரதா ஆஜராகாததால் அவரை தேடப்படும் நபராக நீதிமன்றம் அறிவித்தது.  ஜெயப்ரதாவை கைது செய்து வரும் 6ம் தேதி நேரில் முன்னிறுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.