டில்லி
பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி நிறுவனங்களுக்கான கார்பரேட் வரியை 10% ஆக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சாமி ஒரு பொருளாதார ஆர்வலர் ஆவார். முன்னாள் அமைச்சரான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவருடைய வெளிப்படையான கருத்துக்கள் பல முறை சர்ச்சைகளைக் கிளப்பிய போதிலும் இவர் தொடர்ந்து தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இவர் ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த கட்டுரையில் சுப்ரமணியன் சாமி, “தற்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது குறித்து நான் 2015லிருந்து கூறி வருகிறேன். இன்று பொருளாதாரம் மேலும் சீர் கெட்டு முழுமையாக அழியும் நிலையை எட்டி உள்ளது. இதற்கு பொறுப்பானவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் உள்ளதாகத் தோன்றுகிறது. பிரதமர் பொருளாதாரத்தில் சரியான பயிற்சி பெற்றவர் இல்லை.
ஆனால் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தில் சரியான பயிற்சி பெறவில்லை என்பது சாதாரணமானது இல்லை. அதைப் போல் நிர்மலா சீதாராமனும் பொருளாதார தொழில் நுட்பம் பற்றி அறியாதவராக உள்ளார். ரகுராம் ராஜனும் ஒரு நல்ல நிர்வாகியே தவிரப் பொருளாதார வல்லுநர் இல்லை. அவர் பண வீக்கத்தைக் குறைக்க வரி விகிதத்தை அதிகரித்தார். அதனால் முதலீட்டுச் செலவுகள் அளவுக்கு அதிகமாக ஆனது.
ஊடகங்கள் தற்போது மிரட்டலினால் பயந்துள்ளன. பொருளாதார வல்லுநர்களும் பணி இழக்க நேரிடும் என அஞ்சுவதால் அரசுக்கு எதிராக எதையும் கூற முன் வருவதில்லை. பொருளாதாரத்தை முன்னேற்ற 12 வழிகள் என்னும் எனது புத்தகம் விரைவில் வெளி வர உள்ளது. அதில் நான் வருமான வரியை அடியோடு ஒழிப்பதையும் ஒரு வழியாகத் தெரிவித்துள்ளேன்.
நாம் நமது மக்களை முன்னேற்றா தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்னைக் கேட்டால் கடனுக்கான வட்டிகளை 9% ஆகக் குறைக்கவும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டிகளை 9% ஆக அதிகரிக்க வேண்டும் எனக் கூறுவேன். பற்றாக்குறையை நீக்க புதிய நோட்டுக்களை அச்சடிக்கும் இந்திய முறை சரியான தீர்வு அல்ல.
மோடி அரசு ஊழலை ஒழிக்க முன் வர வேண்டும். தவறு செய்யும் பல முக்கிய புள்ளிகலஈ உடனடியாக சிறையில் தள்ள வேண்டும்.
இன்றைய நிலையில் தனியார் துறையினர் மிகவும் துன்புறுத்தப் படுகின்றனர். ஆனால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களில் பலர் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அதைத் தடுக்க கார்பரேட் வரி 10% ஆகக் குறிக்கப்பட வேண்டும். வரும் 2024க்குள் 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்ட வேண்டும் என்றாலிந்தநடவடிக்கைகள் அவசியமாகும். அப்படி இருப்பினும் நாம் இன்னும் 5 வருடங்களுக்குள் 16% வருட வளர்ச்சியை அடைவோமா? நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.