மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி சிகிச்சை பலனின்றி இன்று காலாமானார்.

திலீப்காந்தி மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராவார். 1999 ஆம் ஆண்டு அகமத்நகர் மக்களவை தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து, கடந்த  2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கப்பல்த்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.  பின்னர் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் இதே தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். மீண்டும் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் அவர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

வயது முதிர்வு காரணமாக,  2019 மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கட்சி பணியில் இருந்து ஒதுக்கி இருந்த திலீப்காந்திக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து,  டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.