டெல்லி:
76 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை. ஊரடங்கு நீட்டிக்கலாமா என ஏப்ரல் 27ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஊரடங்கை தளர்த்துவதற்கான வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், அறிகுறியே இல்லாத 186 பேருக்கு கொரோனா உறுதியான விவகாரம் கவலையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

அத்துடன், ஊரடங்கு தளர்வு பற்றி ஏப்ரல் 27 ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறிய அவர் 76 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை என்றார். தற்போதைய ஆய்வில் தளர்த்துவது சரியாக இருக்காது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கெஜ்ரிவால் பேசுகையில், நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நான் பேசினேன். அவர் அரசின் உணவு விநியோகப் பணியில் இணைத்துக் கொண்ட தன்னார்வலர். அவர் அரசின் உணவு விநியோக மையத்தில் மக்களுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, அவர் இருந்த அந்த மையத்திற்கு வந்து சென்றவர்களுக்கு ரேபிட் டெஸ்ட்டை விரைந்து செய்ய உத்தரவிட்டுள்ளேன். டெல்லியில் சீரான வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இருப்பினும் கட்டுக்குள் தான் இருக்கிறது. மக்கள் பீதி அடையத்தேவையில்லை என்றார்.