புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் அதிகரிக்க தொடங்கியதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி ஊரடங்கு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் பள்ளி- கல்லூரிகள் திறக்கபட்டதோடு, அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் 4வது அலை தொடங்கிவிட்டதா என்று மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதனால் இதுவரை 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் டோஸ் போடுவது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் வரை கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆகவே அனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.