சென்னை: தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக சகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும், அதற்கான அனுமதி கோரப்பட்டு உள்ளது  சட்டப்பேரவையில்  தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர்  3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. பேரவையில் கொரோனா  மற்றும் தடுப்பூசி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி குறித்த பயம் மக்களிடையே இருந்து நீக்கும் வகையில், முதல்வர் உள்பட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர்,  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும்  விரைவில் கொரொனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விரைவில் சாதகமான பதில் வரும்.சாதகமான பதில் வந்ததும் 50 வயதுக்கு மேற்பட்டோர், பத்திரிக்கையாளர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.