சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி,  தமிழக அரசை பாராட்டினார்.

தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளன. அதன்படி, இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கியது. இந்த முகாம்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில்  நடைபெற்று வருகிறது.

இந்த தடுப்பூசி முகாமை இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்  உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி சமீபகாலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்று பாராட்டு தெரிவித்தார்.