சென்னை:
கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுந்தகவல் மூலம் அறியும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

பின்னர் அவர் பேசியதாவது, கொரோனாவை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றினாலே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கட்டுக்குள்தான் உள்ளது.கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரின் செல்லிடப்பேசிக்கு, 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் பரிசோதனை முடிவுகள் அனுப்பும் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.