சென்னை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் இறுதியில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது.  அதையொட்டி திருமழிசையில் காய்கறி சந்தை, மாதவரம் பேருந்து நிலையத்தில் பழச்சந்தை, வானகரத்தில் பூ சந்தை அமைக்கப்பட்டது.   இதனால் வர்த்தகர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.  மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க கோரிக்கை விடுத்தனர்.

வர்த்தகர்கள் வேண்டுகோளுக்கிணங்க சென்ற மாதம் 18 ஆம் தேதி கோயம்பேட்டில் உணவு தானிய சந்தை மற்றும் 26 ஆம் தேதி காய்கறி சந்தை திறக்கப்பட்டது.   அங்கு மொத்த வர்த்தகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பொதுமக்களுக்குச் சிறு வர்த்தகர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.  மார்கெட் வரும் வர்த்தகர் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு அனைவருக்கும் நடக்கும் தினசரி கொரோனா பரிசோதனையில் இரண்டே நாட்களில் வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இவர்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதாரங்கள் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகவல் மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.